Friday, April 5, 2013

இருக்கின்றாள் என்ற ஒன்றே


பவானி  பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் பேராசிரியர் வெற்றிவேல் பேசினார்."எங்க ஆண்டுவிழாவுக்கு வர ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. உங்களை பவானிக்கு அழைத்து வர நம்ம மாணவர் ஒருவர் வருவாருங்க".பல கல்லூரிகள் சிறப்பு விருந்தினரை அழைத்து வர கல்லூரி
விரிவுரையாளர்களையோ மாணவர்களையோ அனுப்புவது வழக்கம்தான்.சற்று நேரத்தில் மகேந்திரன் என்றொருவர் பேசினார். மறுநாள்
காலை எட்டரை மணியளவில் வருவதாகத் தெரிவித்தார். வந்த "மாணவர்" வயது நாற்பதுக்கு மேலிருக்கும். பிறகுதான் தெரிந்தது, அந்தப்
பேராசிரியரின் முன்னாள் மாணவர் மகேந்திரன் என்று.
காளப்பட்டியில் செங்கல் சூளை வைத்திருக்கும் மகேந்திரனுக்கு ஒரு பேராசிரியருக்கே உரிய கண்டிப்பான முகம். காரைக்கிளப்பி இருபது
நிமிடங்கள் ஆகியும் அறிமுகம் நிகழ்ந்தமைக்கான முதல் புன்னகையைக் கூட அவர் வழங்கியிருக்கவில்லை.காரை நிதானமாக ஓட்டிக்
கொண்டு ஸ்லோ மோஷனில் சில வார்த்தைகளை சொல்லிக் கொண்டே வந்தார். இவருடன் பவானி வரை எப்படி போகப் போகிறோம்
என்ற எண்ணம் தோன்றி சில நிமிஷங்களிலேயே அவருடைய பேச்சில் சூடு பிடித்தது. அதற்குக் காரணம், அவரைப் போலவே நானும்
காபி பிரியன் என்பது பேச்சுவாக்கில் வெளிப்பட்டதுதான். தன்னுடைய முதல் புன்னகையை எனக்கு வழங்கினார்.தன் தொழில் பற்றி,
தான் சந்தித்த துரோகங்கள் பற்றி தன் இளமைக்கால வாழ்க்கை பற்றி விரிவாகப் பேசத் தொடங்கினார்.
சின்ன வயதில் வழிகாட்ட யாருமில்லாமல் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு வளர்ந்தவர் மகேந்திரன். பாலிடெக்னிக் ஒன்றில்
பயின்ற அந்த கிராமத்து இளைஞருக்கு மூத்தோர் சொல் அமிர்தம் என்ற சூத்திரம் எப்படியோ பிடிபட்டிருந்தது.அறிவிலும் அனுபவத்திலும்
மேம்பட்டவர்கள் சொன்னதையெல்லாம் ஆர்வமாக உள்வாங்கி வளர்ந்தவர் என்பது தெரிந்தது. பாலிடெக்னிக் படிப்பின் முதல்நாளில்,
கிராமத்து இளைஞர்கள் அழிப்பானை "'லப்பர்" என்று சொல்லிக் கொண்டிருந்ததை மாற்றி "எரேஸர்" என்று சொல்லக் கற்றுக் கொடுத்த
ஆசிரியரின் அறிவுரை தொடங்கி எல்லாமே மகேந்திரனுக்கு ஞாபகமிருந்தது.

முதல் பார்வைக்குக் கரடுமுரடாகத் தெரியும் மகேந்திரன் வெள்ளந்தியான மனிதர் என்பது மெல்ல மெல்ல விளங்கியது.அவினாசி
நெடுஞ்சாலையை கார் கடந்து கொண்டிருந்தது.பக்கத்து கிராமங்களின் பாதைகள் இடைவெட்டாக நெடுஞ்சாலைக்குள் நுழைந்து
கொண்டிருந்தன."நெடுஞ்சாலைக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இருநூறு இருநூறு ரேஷன் கார்டுக இருந்தா ஒரு பாலம்
கட்டோணும் சார். செலவாகுமுண்ணு காசைக் கொடுத்து என்.ஓ.சி. வாங்கீட்டாங்க. அதனாலதான் ஏகப்பட்ட ஆக்ஸிடெண்ட்"
என்பது போன்ற நுட்பமான விஷயங்களைச் சொன்ன மகேந்திரன் தனக்குத் தெரிந்த எதையும்  வீண் செய்யவில்லை.

தன் மகள் மித்ரா பிரி.கே.ஜி. போகும்போதே 'எரேஸர்' என்று சொல்லக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.வகுப்பில் எரேஸர் கேட்ட
மித்ராவின் அறிவில் மயங்கிய ஆசிரியை கொடுத்த பாராட்டு முத்தம், பாரதரத்னா விருதை விட பெரிய விஷயம்தானே
மித்ராவுக்கு!பிஞ்சு வயதிலேயே சாலை விதிகளின் நுட்பங்களைப் பற்றி அப்பாவிடம் தெரிந்து கொண்டு மாமாக்களுக்கும்
சித்தப்பாக்களுக்கும் தகுந்த நேரங்களில் மித்ரா உபதேசித்து வருவதைச் சொல்லும் போது மகேந்திரன் முகத்தில் மலர்ந்தது
அந்த நாலின் முதல் பூ. நெடுஞ்சாலையெங்கும் முளைத்திருக்கும் கும்பகோணம் டிகிரி காபி கடை ஒன்றில் பித்தளை
டபரா செட்டும் கையுமாக அமர்ந்திருந்தோம்.அந்தக் கடை அன்றுதான் திறப்புவிழா கண்டிருந்தது.
அவினாசி சாலையிலும் திருச்சி சாலையிலும் மேட்டுப்பாளையம் சாலையிலும் கும்பகோணம் டிகிரி காபி கிடைக்கும்
இடங்களை இடம் சுட்டிப் பொருள் விளக்கிய மகேந்திரன் அந்தக் கடைக்காரரிடம் பாலின் அடர்த்திஎப்படி இருக்க வேண்டுமென்று
சிறு வகுப்பு நடத்திவிட்டே புறப்பட்டார்.கூட்டம் முடிந்து திரும்பும் வழியிலும் நல்ல பால்கோவா கிடைக்கும் இடத்தையும்,
ஹோல்சேல் விலையில் தரமான கோதுமை விற்கக்கூடிய ஆலை ஒன்றின் பிரத்யேக கடையையும் எனக்குக் காட்டித் தந்தார்.
அலுவலகத்தில் இறக்கிவிட்ட மகேந்திரனிடம் மித்ராவுக்கு தரச்சொல்லி கான்ஃபிடன்ஸ் கார்னர் புத்தகம் பரிசளித்தேன்.
அதற்குப் பிறகு அவரிடம் பேசும் தருணம் வாய்க்கவில்லை. சில நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகம் அருகில் வாசலில்
அவசர ஷாமியானா போடப்பட்டிருந்த வீடொன்றின் வாசலில் செல்ஃபோனும் கையுமாய் பெருங்கூட்டம் நடுவே மகேந்திரன்தட்டுப்பட்டார்.
சூழல் சரியாய் இல்லாததால் நின்று பேசுவதைத் தவிர்த்தவன், இரண்டு நாட்கள் கழித்து மகேந்திரனைத் தொலைபேசியில்
அழைத்தேன். "ரெண்டு நாளு முன்னே ஏதோ பெரிய காரியத்தில இருந்தீங்க போல" என்றேன். கொங்குப் பகுதியில் மரணங்களைப்
பெரிய காரியம் என்று சொல்வது வழக்கம்."ஆமாம் சார் ! சூசைடு பண்ணீட்டாருங்க!" என்றார். பதைத்துப்போய் "யார்" என்று கேட்டபோது
மகேந்திரன் சொன்னார்,"சம்சாரத்துக்கு இதய நோய் வந்துடுச்சுன்னு வெக்ஸ் ஆயி தூக்கு மாட்டீட்டாருங்க! எங்க தாத்தா தானுங்க!
அம்மாவுக்கு அப்பா! வயசு 102ங்க! பாட்டிக்கு வயசு 94"!
மறைந்த பெரியவர் பெயர் ரங்கசாமி என்பதும் அவர் மனைவி பெயர் ரங்கநாயகி என்பதும் உபரித் தகவல் .

பாரதிதாசனின் முதியோர் காதல் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.
"புதுமலர் அல்ல மேனி;புற்கட்டே அவளுடம்பு
மதிமுகம் அல்ல வறள்நிலம் குழிகள் கண்கள்
சதுராடும் நடையாள் அல்லள்:தள்ளாடி விழும் மூதாட்டி
எது எனக்கின்பம் நல்கும்? இருக்கின்றாள் என்ற ஒன்றே!"